11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர் கைது!

பாட்னா (09 ஜன 2022): பிகாரில் ஒரே வருடத்தில் 11 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகாரில் 84 வயது முதியவர், கடந்த ஒரு வருடத்தில் 11 முறை கோவிட்-19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளார். இதனை அடுத்து மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர் வினய் கிருஷ்ண பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில், பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்பவர் மீது புரைனி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 188 (அரசு ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுதல்), 419 (நபர்களால் ஏமாற்றுதல்), மற்றும் 420 (ஏமாற்றுதல்) ஆகியவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது, இவை அனைத்தும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள். இருப்பினும், அவரது வயது முதிர்வைக் காரணம் காட்டி, பிரம்மதேவ் மண்டல் ஜாமீன் பெற வாய்ப்புள்ளது.

முதியவர் இந்த வார தொடக்கத்தில் பன்னிரண்டாவது முறையாக கோவிட் தடுப்பூசியை எடுக்க முயன்றபோது சுகாதார ஊழியர்கள் அவரைப் பிடித்தனர்.

பிரம்மதேவ் மண்டல் பிடிபட்ட பிறகு, முதற்கட்ட விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலத்தில், அவர் தனது ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டையைப் பயன்படுத்தி 11 முறை தடுப்பூசி போட்டுக்கொண்டது தெரியவந்தது.

ஒருவர் 11 முறை கோவிட்-19 தடுப்பூசியை போட்டுக்கொண்டது, சுகாதாரத் துறையின் அலட்சியத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply