இந்தியாவில் 60 ஆயிரத்தை எட்டும் கொரோனா பாதிப்பு – பலி எண்ணிக்கை 1981 ஆக உயர்வு!

Share this News:

புதுடெல்லி (09 மே 2020): இந்தியாவில் கொரோனாவால் 59,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1981 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் கணிசமாக உயர்கிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 59,662 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3320 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 95 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1981 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 17847 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1307 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 19063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 731 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் இதுவரை 7402 பேருக்கும், டெல்லியில் 6318 பேருக்கும், தமிழகத்தில் 6009 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 3341 பேருக்கும், ராஜஸ்தானில் 3579 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3214 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Share this News: