சென்னை (08 ஜூன் 2020): திமுக தலைவர் ஸ்டாலினுக்கு லேசான காய்ச்சல் இருமல் இருந்ததால் கொரோனா அறிகுறியாக இருக்குமோ என அவரது உறவினர்களும் திமுகவினரும் பதற்றத்தில் காணப்பட்டனர்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவைரஸ் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின், மிகுந்த வருத்ததில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி ஸ்டாலினுக்கு திடீரென தொடர்ந்து இருமலும், லேசான காய்ச்சலும் இருந்துள்ளது. தொடர் இருமல், காய்ச்சல் இருந்தால் கொரோனா அறிகுறியாக இருக்கலாம் என்று சுகாதாரத் துறை சார்பில் ஏற்கனவே விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், ஸ்டாலின் உள்பட அவரது குடும்பதினர் மிகவும் வருத்தமடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, மருத்துவரை அன்றைய தினமே சந்தித்த ஸ்டாலின், அவரது அறிவுறுத்தலின் பேரில் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதற்கான மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை முடிவு வரும் வரையில், ஸ்டாலின் குடும்பத்தினர் ஒருவித பதற்றத்துடனேயே இருந்துள்ளனர். அதன்பிறகு வந்த பரிசோதனை முடிவில் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்ததும் அவரது குடும்பத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.