சென்னை (24 ஆக 2022): தமிழ் நாடு வக்பு வாரியம் மீது அவதூறு பரப்பிய தடா ரஹீம் மற்றும் ஆதன் யூடியூப் சேனல் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து முஸ்லிம் லீக்
மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் வெளியிட்டுள்ள முகநூல் அறிக்கையில் கூறியிருபதாவது _
பாஜக ஆதரவு ஆதன் தமிழ் இணையதளத்தில் 14 ஆகஸ்ட் 2022 அன்று திரு.மாதேஸ்வரன் அவர்களின் கேள்விக்கு பதிலளித்த தடா ரஹீம் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குறித்தும் தமிழ்நாடு வக்ப் வாரிய மாண்புமிகு தலைவர் குறித்தும் அவதூறாக பேசியது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக திரு.மாதேஸ்வரன் அவர்களிடம், ‘முஸ்லிம் சமுதாயத்தில் செல்வாக்கற்ற பிரச்னைக்குரிய ஒரு நபரை விளம்பரப்படுத்தும்’ நோக்கோடு அமர வைத்து, உண்மைக்கு புறம்பான செய்திகளை உளறிக்கொட்ட வைப்பதும், பதிலளிக்க வாய்ப்பில்லாத நிலையில் அதை அப்படியே வெளியிடுவதும் என்ன நியாயம்? என்றும், சமுதாயத்தில் செல்லாக்காசான ஒருவர், மதிப்பு மிக்க தலைவரை ஒருமையில் பேசியதை வெளியிடுவதும் தான் ஊடக தர்மமா? என இன்று தொலைபேசியில் கேட்டேன்.
அதை தவறு என ஒத்துக்கொண்ட திரு.மாதேஸ்வரன், ‘அதை எடிட் செய்து, வெளியிட்டிருக்க வேண்டும்; இனி இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறார்.
அப்படியானால் அபாண்டமான குற்றச்சாட்டை வெளியிட்டு அதை லட்சக்கணக்கானோர் பார்க்கச் செய்திருக்கிறீர்களே அதற்கு என்ன பரிகாரம்? என கேட்ட போது, ‘தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் எம். அப்துல் ரஹ்மான் அவர்களை விரைவில் பேட்டி கண்டு அவரது விளக்கத்தை வெளியிடுகிறேன்’ என்கிறார்.
ஊடக சுதந்திரம் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எந்த கேள்வியும் கேட்கலாம்; எவன் சொல்லும் பொய் அவதூறுகளையெல்லாம் வெளியிடலாம் என்பது இன்று வாடிக்கையாகிவிட்டது.
அப்பழுக்கற்ற நேர்மையான வக்பு வாரிய தலைவர் மீது அபாண்ட புகார் சுமத்திய தடா ரஹீம் அவர்கள் மீதும், அதை வெளியிட்ட ஆதன் தமிழ் இணையதள ஊடகத்தின் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை அறியத்தருகின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.