புதுடெல்லி (30 ஜூன் 2020): 5ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் மாலை 4 மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, “அன் லாக் 2.0 தொடங்கி விட்டது. பொது முடக்கத்தில் தளர்வுகள் அளித்தாலும் முன்பை விட எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு தவறுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். கரோனா காரணமாக பொது முடக்க தளர்வுகளால் பலர் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் சுற்றுகிறார்கள்.
இது மிகப்பெரிய தவறான முன் உதாரணம், மக்கள் தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியாவில் 80 கோடி பேருக்கு 5 கிலோ கோதுமை வழங்கப்பட்டுள்ளது. 18 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்குப்பட்டுள்ளது. மக்களுக்கு கோதுமையுடன், பருப்பும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.
பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் ஒரே சட்டம்தான் இந்தியாவில் இருக்கின்றது. அதை அனைவரும் மனதில் நினைத்திருக்க வேண்டும். கரீப் கல்யாண் திட்டத்தில் வரும் நவம்பர் மாதம் வரையில் இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும். கோதுமை அல்லது அரிசி இலவசமாக அந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இலவச உணவுப்பொருட்கள் வழங்க அரசு மேலும் 90,000 கோடி செலவிட உள்ளது” என்றார்.