புதுடெல்லி (16 ஜூலை 2020): விசா நடைமுறைகளை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட 92 இந்தோனேசிய தப்லீக் ஜமாத்தினருக்கு டெல்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் நடைபெற்ற கூட்டத்தில் , இந்தோனேசியாவை சேர்ந்த 92 தப்லீக் ஜமாத்தினரும் பங்கு பெற்றனர். இவர்கள் மீது விசா நடைமுறைகளை மீறியதாகவும், கொரோனா பரவிய நேரத்தில் சட்ட விதிமுறைகளை மீறி கூட்டம் கூட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இவர்கள் சிறையிலடைக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும் அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருந்தனர். இந்நிலையில் இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் குர்மோகினா கவுர் தலைமையில் நடைபெற்றது.
இவர்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஷிமா மண்ட்லா, மந்தாகினி சிங், மற்றும் பாஹிம் கான் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.விசாரணையின் முடிவில் 92 தப்லீக் ஜமாத்தினருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.