மதுரை (23 செப் 2020): அழகிரி திமுகவில் மீண்டும் இணைந்துள்ள உறுப்பினர் அட்டை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவிலிருந்து நிரந்தரமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அண்மையில் தன்னை மீண்டும் திமுகவில் சேர்க்கக் கோரி வெளிப்படையாகவே தெரிவித்தார். ஆனால், திமுக அதைப் பொருட்படுத்தாத நிலையில், இணையவழி உறுப்பினர் சேர்க்கையில் மு.க.அழகிரி பெயரில் உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறார் அவரது ஆதரவாளர் கபிலன்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பேரூர் திமுகவின் முன்னாள் செயலாளராக இருந்தவர் பெ.கபிலன். தீவிர அழகிரி ஆதரவாளரான இவர் அழகிரியின் வெளியேற்றத்துக்குப் பின் திமுகவில் ஓரம்கட்டப்பட்டார். குமரி மாவட்ட அழகிரி விசுவாசிகளில் முக்கியப் புள்ளியான இவர் இப்போது மு.க.அழகிரிக்கு இணையவழியில் உறுப்பினர் அட்டை பெற்று இருக்கிறார். அதிலும் உறுப்பினர் அட்டைக்கான முகப்புப் படம் தொடங்கி, அழகிரிக்கே உறுப்பினர் அட்டை வழங்கியது வரை திமுகவின் உறுப்பினர் சேர்க்கையையே இது விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளது.