புதுடெல்லி (20 ஆக 2020): முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த வாரம் பிரணாப் முகர்ஜி (84) மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளையிலிருந்த ரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு, டெல்லி ராணுவ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்துவந்த சூழலில், தற்போது அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், வெண்டிலேட்டர் மூலம் பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.