கொல்கத்தா (20 ஜூன் 2020): சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மைக்கு பதிலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் இன் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளனர்.
லடாக் எல்லையில் சீன வீரர்கள் திடீரென நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் சீனா மற்றும் அந்நாட்டு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கைகள் எழுந்தன. ஒரு கட்டத்தில் சீன தயாரிப்பு பொருட்களை சேதப்படுத்தி பாஜகவினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் சீன அதிபர் ஜின்பிங்கின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட களம் இறங்கினர். அங்குள்ள அசான்சோலைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர்கள் ஜின்பிங் உருவ பொம்மைக்கு பதிலாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவப்படத்தை எரித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இது சமூகவலைத்தளங்களில் கடும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.