புதுடெல்லி (25 பிப் 2020): டெல்லியில் நேற்று ஏற்பட்ட வன்முறையில் இதுவரை ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாகவே பதற்றம் நிலவி வரும் நிலையில் திங்கள் அன்று ஏற்பட்ட திடீர் கலவரத்தில் போலீஸ் தலைமை காவலர் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் மஜ்பூர் மற்றும், ஃபாஃப்ராபாத் பகுதிகளில், குடியுரிமை ஆதரவாளர்கள் என்கிற பெயரில் வன்முறையாளர்கள் புகுந்ததை அடுத்தே கலவரம் மூண்டுள்ளது.
முதலில் தலைமை காண்ஸ்டபில் ரத்தன் லால் உயிரிழந்ததாக போலீஸார் அறிவித்தனர். பின்பு மேலும் மூவர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. பின்பு நான்கு என தகவல் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் நிலவும் நிலைமை குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியின் துணை கவர்னர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். கூட்டம் மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது.
இதற்கிடையே டெல்லி வன்முறை குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலையைப் குறித்து நான் கவலைப்படுகிறேன். நமது நகரத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஈடுபடுவோம். வன்முறையைத் தவிர்க்குமாறு அனைவரையும் நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.