கடலூர் (04 செப் 2021): கடலூர் மஞ்சக்குப்பம் கோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் அரியலூர் அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் தமிழக அரசு ஆலோசனை நடத்தியதன் பயனாக கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன.
முதற்கட்டமாக 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பாக பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் செப்டம்பர் 1க்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு ஆணையிட்டு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
இந்நிலையில் பள்ளிகள் திறந்த 2 நாளில் கடலூர் மஞ்சக்குப்பம் கோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உறுதி செய்துள்ளார்.
அதேபோல் அரியலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.