கோவை (11 மார்ச் 2022): தமிழகத்தில் கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு பெரிதும் சாதகமாக அமைந்தது. குறிப்பாக கோவை மாவட்ட வெற்றியானது முதல்வர் மு.க.ஸ்டாலினிற்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கிடைத்த வெற்றிக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை கொண்டாடி தீர்த்துவிட்டார் அவர்.
இதற்கிடையில் கோவை மாநகராட்சியின் முதல் மேயராக 19வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு வயது 40. இவர் கோவையின் 6வது மேயர். திமுகவின் முதல் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. எளிய குடும்பத்தில் இருந்து அரசியலில் இப்படியொரு முன்னேற்றம் கண்டுள்ளார்.
கோவை மணியகாரபாளையத்தில் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். இவருடைய கணவருடன் சேர்ந்து இ-சேவை மையம் ஒன்றை நடத்தி கொண்டிருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருப்பவர். இந்தச் சூழலில் கோவையில் ஏற்கனவே இருக்கும் பல்வேறு அதிகார மையங்களை ஓரங்கட்டி விட்டு எளிய பின்னணியில் இருந்து வந்த கல்பனாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் செந்தில் பாலாஜி வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.