வாஷிங்டன் (22 மார்ச் 2020): அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அதி வேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. நாளுக்கு நாள் இதனால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 73 வயதான கிரேஸ் பியூஸ்கோ என்ற மூதாட்டி மற்றும் அவரது ஆறு பிள்ளைகளும் மிகப் பெரிய குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுக்கூடல் நிகழ்வுக்கு சென்று வந்த பிறகு அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளது. இதையடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியும் குடும்ப உறுப்பினர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் 20 பேர் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 25,493 பேருடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது, அவர்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.