சி.ப.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் – முதல்வர் திறந்து வைத்தார்!

Share this News:

திருச்செந்தூர் (22 பிப் 2020): திருச்செந்தூரில் பத்திரிக்கை அதிபர் சி.ப. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் 1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் செலவில் 60 சென்ட் நிலத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் மணி மண்டப திறப்பு விழா இன்று தொடங்கியது.

அப்போது, பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தை ரிப்பன் வெட்டி முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர், பா.சிவந்தி ஆதித்தனார் புகைப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அத்துடன் பா.சிவந்தி ஆதித்தனார் மணி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களுக்கு முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பா.சிவந்தி ஆதித்தனார் முழு உருவச் சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத்தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Share this News:

Leave a Reply