ரஜினி வீட்டில் போலீஸ் குவிப்பு!

சென்னை (23 ஜன 2020): பதற்றம் காரணமாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் அது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் சர்ச்சையானது.

இதனிடையே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் வீட்டை முற்றுகையிட முயன்ற திராவிடர் விடுதலை கழகத்தினர் செம்மொழி பூங்கா அருகே தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். மன்னிப்பு கேட்கும் வரை ரஜினிக்கு எதிரான போராட்டம் தொடரும் என அவர்கள் எச்சரித்தனர்.

பதற்றம் காரணமாக போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வீட்டை சுற்றி 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, பெரியார் பற்றி ரஜினி அவதூறாக பேசியதாக திராவிடர் விடுதலை கழகம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *