போக்குவரத்துக்கு நாங்கள் இடையூறல்ல போலீஸ்தான் – ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் – (VIDEO)

shaheen-bagh
Share this News:

புதுடெல்லி (20 பிப் 2020): ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் யாரும் போக்குவரத்துக்கு இடையூறாக இல்லை போலீஸ்தான் வழியை அடைத்து வைத்துள்ளது என்று ஷஹீன் பாக் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷஹீன் பாக்கில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்குக் கொண்டு வர அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அதில் வெற்றியடைய முடியவில்லை.

இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பான வழக்கு கடந்த 17 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், “பொதுமக்கள் ஒரு தீர்வுக்காக போராடுகிறார்கள். எனவே இப்போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது. அதேவேளை பொதுமக்களுக்கோ, சாலை போக்குவரத்திற்கோ போராட்டக் காரர்கள் இடையூறு செய்யாமல் போராட்டம் நடத்த வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் போராட்டக் களத்தை மாற்றவும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே தலைமையிலான குழு ஒன்றையும் நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் மற்றும் வஜஹத் ஹபீபுல்லா ஆகியோர் சென்றனர். அப்போது பேசிய போராட்டக்காரர்கள், இது பிரதான சாலை இல்லை. டெல்லியிலிருந்து நொய்டா செல்வதற்கான தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதிலும் ஒரு பகுதியில்தான் நாங்கள் இருக்கிறோம். பல பகுதிகளை போலீஸ் வேண்டுமென்றே அடைத்து வைத்திருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர்கள், இந்தப் பாதையில் மட்டுமே செல்ல வேண்டும் என ஏன் அடம்பிடிக்கிறார்கள். நாங்கள் இங்கிருந்து கலைந்து சென்றுவிட்டால், எங்களை மறந்துவிடுவார்கள்” என்றனர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஆரம்பம் முதல் பங்கேற்றுள்ள மூதாட்டிகள் ஆசிமா காத்தூன் மற்றும் பல்கீஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், இட மாற்றம் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும்தெரிவித்துள்ளனர்.

ஆனல் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply