பிரமிக்க வைத்த ரியாத் தமிழ்ச் சங்க இரத்த தான முகாம்

பிரமிக்க வைத்த ரியாத் தமிழ்ச் சங்க இரத்த தான முகாம்
Share this News:

ரியாத் (20 மே 2024): ரியாத் தமிழ்ச் சங்கம் கடந்த 17/05/2024 வெள்ளிக்கிழமை அன்று நடத்திய நிகழ்ச்சி,  மன்னர் பஹத் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் “உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்! ” என்ற திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம் (குருதிக் கொடை நிகழ்ச்சி) ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தி பலரின் புருவத்தை உயர்த்தியுள்ளது.

“இரத்ததானம் உயிர்களைக் காக்கும்; இரத்ததான விழிப்புணர்வை அதிகரிப்போம்; தேவைப்படுபவர்களுக்கு பாதுகாப்பான, தரமுள்ள இரத்தம் காலத்தே கிடைப்பதை உறுதி செய்வோம். நாம் அனைவரும் ரத்த தானம் செய்வோம். யாரோ ஒருவருக்காக நாம் இருப்போம்” ஆகிய விழிப்புணர்வுகளை வெறும் பதிவுகளாக கடந்து செல்லாமல் செயலில் சிறப்பாக நடத்திக் காட்டியுள்ளது ரியாத் தமிழ்ச் சங்கம்.

கடந்த 20 வருடங்களாக சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் தமிழின் வளத்திற்காகவும், தமிழர் நலத்திற்காகவும்  சிறப்பாகச் செயல்பட்டு வரும் அமைப்பு ரியாத் தமிழ்ச் சங்கம். (இந்நேரம்.காம்)

ரியாத் தமிழ்ச் சங்கத்தில் (2024-2025) ஆண்டுக்கான புதிய உயர்நிலைக் குழு பொறுப்பேற்றுக் கொண்டது. இதனை அடுத்து தனது முதல் நிகழ்வாக, சமூக அக்கறையைக் கருத்தில் கொண்டு 17/05/2024 (வெள்ளிக்கிழமை) அன்று மன்னர் பஹத் மருத்துவமனை வளாகத்தில் – “உதிரம் கொடுப்போம்! உயிரைக் காப்போம்! ” என்ற திட்டத்தின் கீழ் இரத்த தான முகாம்
(குருதிக் கொடை நிகழ்ச்சி) ஒன்றை மிகச் சிறப்பாக நடத்தி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை இந்தியத் துணை தூதர் மேதகு அபு மாதேன் ஜார்ஜ் (Hon’ble Abu Mathen George, DCM, Embassy of India, Riyadh) அவர்கள் தொடங்கி வைத்துச் சிறப்பித்ததுடன் இரத்ததானமும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுநல அமைப்புகளைச் சார்ந்த சகோதரர்கள் திரு. மீமிசல் நூர் முஹம்மது – IWF, திரு. மீராசாஹிப், திரு. செய்யது ஷபியுல்லாஹ் – RKWA மேலும் கிட்டத்தட்ட 84 சகோதரர்கள் கலந்து சிறப்பித்தனர். ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடையும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து ரியாத் தமிழ்ச் சங்கம் தனது மகிழ்வினை நன்றியோடு தெரிவித்து பின் வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது:

இந்த நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்த திருமதி. இந்திரா வெற்றிவேல், திருமதி. சுபத்ரா மாதவன், சிறுமிகள் ஷபானா, ருமானா உள்ளிட்ட மற்ற சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மன்னர் பஹத் மருத்துவமனை இரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர் Ms. Noura மற்றும் அவர்களின் குழுமத்தினர் அனைவரும் அனுசரணையோடும் அன்போடும் பணியாற்றினார்கள் என்பதைக் கூறுவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த பாலை வெயிலில் தனது அன்பளிப்பாக காலை உணவாலும், குளிர்பானத்தாலும் நம் உடலைப் புத்துணர்வு கொள்ளச் செய்த DOSA Corner நிறுவனத்தார்க்கும் எங்கள் இதய நன்றி.

வந்தோர் அனைவரையும் படம் எடுக்க அழைத்த போதெல்லாம் சோர்வடையாமல் படம் பிடித்து அதை அதிவிரைவு முறையில் குருதிக்கொடை சான்றிதழாய்ப் பதிவேற்றம் செய்த திரு. முஹம்மது ஸெயித் அவர்களுக்கும் இம்மன்றத்தின் தலைவர் திரு. ஹைதர் அலி மற்றும் செயலாளர் திரு. சரவணன் சோமசுந்தரம் மற்றும் உயர்மட்டக்குழுவின் மேற்பார்வையில், சமூக சேவைக்குழுவுடன் இணைந்து நிகழ்ச்சி சிறப்பாக அமைய திறம்பட ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்ட திரு. இர்ஷாத் இப்ராஹிம், திரு. மாதவன், திரு. அபூபக்கர் சித்திக் அவர்களுக்கும், மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும், ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளித்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி.

இவ்வாறு ரியாத் தமிழ்ச் சங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

 


Share this News: