புது தில்லி : கடந்த ஐந்து நாட்களாக குறிப்பாக விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தையே ரணகளமாக்கி வரும் நிலையில் சோனியா மற்றும் ராகுல் காந்தி எங்கும் தென்படாதது அரசியல் அரங்கில் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்தியா வந்த இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கூட இவர்களை சந்திக்க இயலாமல் போனது குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரம் குறித்து பத்திரிகையாளர்கள் பல முறை கேட்டும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் வாய் திறக்க மறுக்கின்றனர். புதன்கிழமையன்று பாராளுமன்றத்திற்கு சோனியா வராதது குறித்து பத்திரிகையாளர்களிடம் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மனிஷ் திவாரி தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று நினைப்பதாக கூறி வருத்தம் தெரிவித்தார்.
மேலும் சாதாரணமாக பாராளுமன்றத்திற்கு வருவதில் சோனியா கவனத்துடன் இருப்பவர் என்றும் மனிஷ் திவாரி குறிப்பிட்டார். அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது புதன் கிழமையன்று இங்கிலாந்து பிரதமர் கேமரூனுடன் நடக்க இருந்த சந்திப்பும் ரத்து செய்யப்பட்டது தான். ஒரு வேளை இருவரும் வெளிநாடு சென்று இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் அது உறுதிப்படுத்தபடாமலும் உள்ளது.
இப்பாராளுமன்ற தொடரில் அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற காங்கிரஸ் கொறடாவின் உத்தரவை மீறியுள்ளனரே என்று கேட்கப்பட்ட போது பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் நாராயணசாமி தொடரில் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததே தவிர வந்தே ஆக வேண்டும் என்று கட்டளை இடப்படவில்லை என்றும் எனவே கொறடாவின் உத்தரவை அவர்கள் மீறவில்லை என்றும் கூறினார்.

| < முந்தையது | அடுத்தது > |
|---|



விமர்சனம் 



